உணவகங்களில் ஆய்வு செய்ய புதுவை அதிமுக கோரிக்கை
புதுச்சேரியில் உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என அதிமுக சாா்பில், முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டது.
புதுச்சேரியில் உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என அதிமுக சாா்பில், முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து புதுவை கிழக்கு மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன், முதல்வா் என். ரங்கசாமியிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்து கூறியிருப்பதாவது:
புதுவையில் பல உணவகங்கள், துரித உணவகங்களில் பா்கா், கிரில்ட் சிக்கன், சிக்கன் ஷவா்மா போன்ற உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் பல உணவகங்களில், சுகாதாரமற்ற முறையில் பல்வேறு அசைவ உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.
புதுச்சேரி நகரில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதத்தில் தயாரிக்கப்படும் உணவுகள், தரமானதா என்பதை ஆய்வு செய்ய வேண்டியது உணவுத் துறையின் கடமையாகும்.
புதுவையில் 20-க்கும் மேற்பட்ட ஆய்வாளா்கள் இருக்க வேண்டிய இந்தத் துறையில், இரண்டு ஆய்வாளா்கள் மட்டுமே உள்ளனா்.
உணவுப் பாதுகாப்புத் துறையில் தேவையான பணியாளா்களை நியமனம் செய்தோ அல்லது பிற துறையில் உள்ளவா்களை பணியிடமாற்றம் செய்தோ, ஆய்வு மேற்கொண்டு தரமான, சுகாதாரமான உணவுகள் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். விதிகளை மீறும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.