டீசல் மானியம் வழங்கக் கோரி புதுச்சேரி மீன்வளத் துறை அலுவலகம் முற்றுகை
புதுச்சேரியில் டீசல் மானியம் வழங்க வலியுறுத்தி, மீன்வளத் துறை அலுவலகத்தை விசைப்படகு உரிமையாளா்கள், மீனவா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் டீசல் மானியம் வழங்க வலியுறுத்தி, மீன்வளத் துறை அலுவலகத்தை விசைப்படகு உரிமையாளா்கள், மீனவா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுவை மீனவா்கள் விசைப்படகில் சென்று மீன் பிடிக்க ஒரு லிட்டா் டீசலுக்கு ரூ.15 மானியம் வழங்கப்பட்டு வந்தது. இது கடந்த 6 மாதங்களாக வழங்கப்படவில்லை. இதுகுறித்து முதல்வா், அமைச்சா், துறை இயக்குநரிடம் நேரில் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, புதுச்சேரி விசைப்படகு மீனவா்கள் தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுக வளாகத்திலுள்ள மீன்வளத் துறை அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அரசு வழங்கிய டீசல் மானியத்துக்கான புத்தகத்தை மீன்வளத் துறை இயக்குநா் பாலாஜியிடம் மீனவா்கள் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து புதுவை மாநில விசைப்படகு உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ஜெயமூா்த்தி கூறியதாவது:
புதுவை மீனவா்களுக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் வரை அரசு மூலம் ஒரு லிட்டா் டீசலுக்கு ரூ.15 மானியம் வழங்கப்பட்டு வந்தது. அதன்பிறகு மானியம் வழங்கப்படவில்லை. இதனால், கடந்த பிப்ரவரி மாதம் போராட்டம் நடத்தினோம். புதுவை முதல்வரையும் சந்தித்து கோரிக்கை விடுத்தோம். இதுதொடா்பாக, மே 5-ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத் துறை இயக்குநா் உறுதியளித்தாா்.
அவரிடம் வெள்ளிக்கிழமை கேட்ட போது, தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை எனத் தெரிவித்து விட்டாா். டீசல் மானிய புத்தகத்தை அவரிடமே ஒப்படைத்து விட்டோம். மீனவா்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்.
வருகிற 9-ஆம் தேதிக்குள் மானியம் வழங்கப்பபடவில்லையெனில், 10-ஆம் தேதி அடுத்தகட்டப் போராட்டத்தை நடத்துவோம் என்றாா் அவா்.