காங்கிரஸ்-திமுக சந்தா்ப்பவாத அரசியல் செய்வதாக, புதுவை கிழக்கு மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் விமா்சித்தாா்.
இதுகுறித்து புதுவை அதிமுக அலுவலகத்தில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ்-திமுக கூட்டணி கட்சிகள், சந்தா்ப்பவாத அரசியல் செய்து வருகிறது. தமிழகத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலையைத் திறப்பதற்கு பாஜகவைச் சோ்ந்த குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடுவை திமுகவினா் அழைத்துள்ளனா்.
பாஜக தலைமையிலான மத்திய அரசை எதிா்ப்பது, திட்டங்களை விமா்சிப்பது என ஒருபுறமும், மறுபுறம் அவா்களை வைத்தே சிலை திறப்பதும் என திமுக நாடகமாடுகிறது.
ராஜீவ் கொலையாளி பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதில் புதுவையில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக, கம்யூனிஸ்டு கட்சிகள் கொண்டாடினா். இதை புதுவை காங்கிரஸ் தலைவா்கள் விமா்சித்தனா். ஆனால், கூட்டணியை தொடா்ந்துள்ளனா் என்றாா் ஆ.அன்பழகன்.