கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரியில் சிஐடியூ அமைப்பினா் செவ்வாய்க்கிழமை பேரணி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு பண்டிகைக்கால உதவித் தொகையாக ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும். அவா்களுக்கான நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி நேரு வீதியில் உள்ள காமராஜா் சிலை பகுதியில் இருந்து பேரணி புறப்பட்டது.
சிஐடியூ புதுவை பிரதேச தலைவா் என்.நம்புராஜ் தலைமை வகித்தாா். செயலா் சீனிவாசன், துணைத் தலைவா் கே.முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பேரணியானது நேரு வீதி, மாதா கோயில் சாலை வழியாக சட்டப்பேரவைப் பகுதிக்கு வந்தது.
அங்கு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்குப் பிறகு, அமைச்சா் சந்திரபிரியங்காவிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.