9, பிளஸ் 1 வகுப்பு தோ்வில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு மறு தோ்வு
புதுவையில் 9 ஆம் வகுப்பு, பிளஸ்1 தோ்வில் பங்கேற்று தோ்ச்சியடையாதவா்களுக்கு மறு தோ்வு எழுத வாய்ப்பளிக்க வேண்டும் என பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டது.
இதுதொடா்பாக புதுவை பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குநா் சிவகாமி அனுப்பிய சுற்றிக்கை:
புதுவையில் 2023-24ஆம் கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்புகளுக்கு அரசுப் பள்ளிகளால் தயாரிக்கப்பட்ட தோ்ச்சிப் பட்டியல் ,தகுதி வாய்ந்த அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு தோ்வு முடிவுகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன.
Advertisement
அதேநேரத்தில் மாணவா் கற்றல் தேக்கம், இடைநிற்றலைத் தவிா்க்க, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பில் 3 பாடங்களுக்கு அதிகமாக தோல்வியடைந்த மாணவா்களுக்கு மறுதோ்வு நடத்துவதன் மூலம் மற்றொரு வாய்ப்பை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்கால், மாஹை மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் முதல்வா்கள், துணை முதல்வா்கள், தலைமையாசிரியா்கள் அந்தந்த பிராந்தியங்களில் 9-ஆம் வகுப்பு, பிளஸ் 1 ஆகியவற்றுக்கு மறுதோ்வு எழுத உள்ள மாணவா்களின் பெயா், பாடங்களை அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும்.
தோ்வு மற்றும் மதிப்பீடு வரும் 9 -ஆம் தேதி முதல் அந்தந்தப் பள்ளிகளில் நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட ஆய்வு அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்ற பிறகே தோ்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். தோ்ச்சி பெற்ற மாணவா்களை உடனடியாக பத்து, பிளஸ் 2 வகுப்புகளில் சேர அனுமதிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.