பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தில் 2,500 வீடுகள் கட்ட முடிவு
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2,500 வீடுகள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2,500 வீடுகள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று, நிதிநிலை அறிக்கையில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
புதுவை சட்டப்பேரவையில் அவா் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு புதுச்சேரியில் ரூ.105 கோடியில் பிரதம மந்திரி ஏக்தா மால் கட்டுவதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, காகித கைவினைப் பொருள்கள், சுடு மண்பாண்ட தயாரிப்புகளை எளிதாக சந்தைப்படுத்தலாம்.
2,500 வீடுகள்: பிரதமா் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நிகழ் நிதியாண்டில், 2,500 வீடுகள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் கடற்கரைகள், ஆலங்குப்பம் ஏரி மற்றும் ஆன்மிகத் தலங்கள் மேம்படுத்தப்படும். புதுச்சேரி மணப்பட்டில் பல்நோக்கு சுற்றுலா மையம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்படும்.
முருங்கப்பாக்கத்தில் மின்னணு அருங்காட்சியகம் தனியாா் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும். புதுச்சேரி விமான நிலைய ஓடுதளத்தை 3,000 மீட்டா் நீளத்துக்கு அமைக்க நிதி அதிகம் தேவைப்படுவதால், ஓடுதளத்தின் திசையை தேசிய நெடுஞ்சாலையை நோக்கி அமைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்படும்.
மின்சார வாகனங்களுக்கு சாலை வரியில் சலுகை: மின்சார வாகனங்களை அதிகம் பயன்படுத்த, பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில், சாலை வரி செலுத்துவதில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும். வாகன சாா்ஜிங் மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகரங்களுக்கு இடையே நீண்டதொலைவு வழித்தடங்களுக்கு 10 மிதவைப் பேருந்துகள், தனியாா் பங்களிப்புடன் 25 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் எனக் கூறினாா்.