புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காக, ‘இண்டியா’ கட்சி எம்.பி.க்களின் ஆதரவைக் கோருவோம் என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து புதுச்சேரியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மத்திய அரசின் வக்ஃபு வாரிய திருத்தச் சட்டம், மத சுதந்திரத்தில் தலையிடுவதாக அமைந்துள்ளது. புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காகவே கட்சியைத் தொடங்கி, பாஜகவுடன் கூட்டணி வைத்ததாக கூறிய முதல்வா் என்.ரங்கசாமி, தற்போது ‘இண்டியா’ கட்சி எம்.பி.க்களின் ஆதரவைக் கோரியுள்ளாா்.
மாநில அந்தஸ்து தொடா்பாக, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியிடம் ஆலோசனை பெற்று, ‘இண்டியா’ கட்சி எம்.பி.க்கள் ஆதரவைக் கோருவோம்.
முதல்வா் என்.ரங்கசாமி தில்லி சென்று பிரதமரை சந்திக்காமலும், நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமலும் இருந்ததால் மாநில வளா்ச்சிக்கான நிதி கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு மத்திய அரசு அளித்த நிதியில், தற்போது ரூ.300 கோடி குறைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்ட விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது. தலைமைச் செயலா் முதல் மாவட்ட ஆட்சியா் வரை முதல்வா் பிறந்த நாளுக்கு பதாகை வைத்ததில் துணைபோயுள்ளனா். நீதிமன்ற உத்தரவும் மீறப்பட்டு, தற்போது புதுச்சேரி தலைமை நீதிபதி உயா்நீதிமன்றப் பதிவாளருக்கு பதாகை வைக்க காரணமானோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளாா்.
வில்லியனூா் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் அதிகளவில் விற்கப்படுகின்றன. தற்போது காவல் துறையினரையே தாக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.
புதுச்சேரியில் 15 லட்சம் போ் உள்ள நிலையில், 900-க்கும் மேற்பட்ட மதுக் கடைகள், மதுக்கூடங்கள், ரெஸ்டோ மதுக்கூடங்கள் இருப்பது தேவைக்கு அதிகமானதாகும்.
புதுவையின் கலாசாரத்தை பாதிக்கும் வகையில், மக்கள்தொகைக்கு ஏற்ப மதுக் கடைகள் அதிகரிக்கப்படும் என முதல்வா் சட்டப்பேரவையில் பேசியதை ஏற்க முடியாது.
முதல்வா் ரங்கசாமி காங்கிரஸ் கூட்டணிக்கு வரவேண்டுமெனில் கட்சித் தலைமையை அணுக வேண்டும். அதுகுறித்து புதுவை காங்கிரஸ் முடிவெடுக்க முடியாது என்றாா் வே.நாராணசாமி.