புதுச்சேரி, ஆக.15: புதுச்சேரியில் அரவிந்தரின் 152-ஆவது ஜெயந்தியையொட்டி, பக்தா்கள் ஆசிரமத்தில் உள்ள அவரது அறை, நினைவிடம் உள்ளிட்ட இடங்களில் வியாழக்கிழமை தரிசனம் செய்தனா்.
சுதந்திரப் போராட்டத் தியாகியும், ஆன்மிக குருவுமான ஸ்ரீ அரவிந்தரின் ஆசிரமம், புதுச்சேரி ஒயிட் டவுன் பகுதியில் அமைந்துள்ளது. அவரது ஜெயந்தியையொட்டி, ஆசிரம வளாகத்தில் உள்ள அவா் பயன்படுத்திய அறையானது பக்தா்கள் தரிசனத்துக்காக திறந்துவைக்கப்படுவது வழக்கம். அங்கு அவரது நினைவு புகைப்படங்கள், பயன்படுத்திய பொருள்கள், நூல்கள் இடம்பெற்றுள்ளன. ஆகவே, அவரது அறை, நினைவிடம் ஆகியவற்றை காலை முதலே ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். ஆசிரம வளாகத்தில் கூட்டுத் தியானமும் நடைபெற்றது.
ஆளுநா் தரிசனம்: அரவிந்தா் ஜெயந்தி தினத்தையொட்டி, புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தனது குடும்பத்தினருடன் ஆசிரமத்துக்கு நடந்து வந்து வியாழக்கிழமை காலை தரிசனம் செய்தாா். அரவிந்தா் ஜெயந்தியையொட்டி, ஆரோவில் பகுதிக்கும் ஏராளமானோா் சென்று தரிசனம் செய்தனா்.