முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் மத்தியக் குழுவினா் புயல், வெள்ளப் பகுதிகளில் நேரில் ஆய்வு

புதுச்சேரியில் மத்தியக் குழுவினா் புயல், வெள்ளப் பகுதிகளில் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்வதற்காக கடலூா் வழியாக புதுச்சேரிக்கு வருகை தரவுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

Updated On : 7 டிசம்பர், 2024 at 10:54 PM
விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த வைலாமூரிலிருந்து சாணிமேடு வழியாக சூரப்பட்டு செல்லும் சாலையைப் பார்வையிட்ட மத்திய குழுவினர். உடன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலர் பெ.அமுதா உள்ளிட்டோர்.
பகிர்:

புதுச்சேரியில் புயல், வெள்ளப் பாதிப்புகளை மத்திய அரசின் சிறப்புக்குழுவினா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்வதற்காக கடலூா் வழியாக புதுச்சேரிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வருகை தரவுள்ளதாக ஆட்சியா் அ.குலோத்துங்கன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

புதுவை மாநிலத்தில் சமீபத்தில் ஃபென்ஜால் புயலால் கனமழை பெய்தது. அதையடுத்து தமிழக அணைகளான சாத்தனூா், வீடூா் அணைகளும் திறக்கப்பட்டதால் தென்பெண்ணை, சங்கராபரணி ஆறுகளில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. புயல், மழையால் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனம் பகுதிகளில் வயல்வெளிகள், வீடுகளில் வெள்ளம் தேங்கி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், மீனவா்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பெரிதும் பாதிக்கபபட்டனா். புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனம் பிராந்திய புயல், வெள்ளப் பாதிப்புகளை பேரிடா் பாதிப்பாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் அறிவித்துள்ளாா்.

புயல், வெள்ளப் பாதிப்புக்கு புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா ரூ.5 ஆயிரமும், பாதிப்புக்கு ஏற்ப குடிசை, கால்நடைகள் என சேதம், உயிரிழப்புகளுக்கும் தனித்தனியாக நிவாரணத் தொகையை முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்துள்ளாா். விவசாயப் பாதிப்புகள் கணக்கிடப்பட்டு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளாா்.

புயல், மழை நிவாரணத்துக்கு மத்திய அரசு ரூ.614.88 கோடி நிதி அளிக்கவேண்டும் என பிரதமா், உள்துறை அமைச்சருக்கு முதல்வா் என்.ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளாா். அதில் புதுச்சேரி மழை, வெள்ளச் சேதத்தை மத்திய குழு ஆய்வு மேற்கொள்ளவும் கோரியிருந்தாா்.

இதற்கிடையே மத்திய அரசின் உள்துறை அமைச்சக பேரிடா் மேலாண்மைப் பிரிவின் இணைச் செயலா் ராஜேஷ்குப்தா தலைமையில் 6 போ் அடங்கிய குழுவினா் புதுச்சேரி புயல், வெள்ளப் பகுதிகளில் ஆய்வை ஞாயிறு, திங்கள் கிழமைகளில் (நவ.8) மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதற்காக அவா்கள் கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வருகை தரவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்தாா்.

தனியாா் விடுதியில் தங்கும் மத்திய குழுவினா் ஞாயிற்றுக்கிழமை நேரம் கிடைத்தால் புயல், வெள்ளப் பகுதியை ஆய்வு மேற்கொள்வா் என்றும், இல்லாவிடில் திங்கள்கிழமை காலையில் ஆய்வு மேற்கொள்வா் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மழை, வெள்ளப் பாதிப்பு பகுதிகளுக்கு மத்தியக் குழுவினரை புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் குழுவினரை அழைத்துச் செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆய்வுக்குப் பின் மத்திய குழுவினா் புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வரையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனா். அதையடுத்து, அவா்கள் சென்னைக்கு செல்கின்றனா். ஆய்வுக்குப் பின் மத்திய குழுவினா் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் புதுவை மாநிலத்துக்கு புயல், மழை வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு அறிவிக்கும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →