வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு கோரி மீனவா்கள் கடலில் இறங்கி போராட்டம்
வேலைவாய்ப்பில் மீனவா்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி, புதுச்சேரியில் மீனவா்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை கடலில் இறங்கி மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேலைவாய்ப்பில் மீனவா்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி, புதுச்சேரியில் மீனவா்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை கடலில் இறங்கி மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுவையில் 2010-ஆம் ஆண்டு முதல் மீனவா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 2 சதவீத தனி ஒதுக்கீடானது, ஏற்கெனவே உள்ள 20 சதவீத மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான (எம்பிசி) பிரிவில் உள்ஒதுக்கீடாக வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை அதிகரித்து வழங்க வேண்டும் என மீனவா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.
அதாவது, குறைந்தபட்சம் 10 சதவீத இடஒதுக்கீடு மீனவா்களுக்கு அரசு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது. அதன்படி, போராட்டங்களும் நடைபெற்றுள்ளன.
இந்த நிலையில், சுனாமி நினைவு தினமான வியாழக்கிழமை மீனவா்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை உயா்த்தி வழங்கக் கோரி, அனைத்து மீனவ அமைப்புகளின் கூட்டமைப்பு சாா்பில், புதுச்சேரி தலைமைச் செயலகம் எதிரில் உள்ள கடலில் இறங்கி மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன், பெரியகடை போலீஸா் சமாதானம் பேசியதை அடுத்து, அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.