காலாப்பட்டு தொகுதியில் ரூ.54 கோடிக்கு திட்டப் பணிகள் -முதல்வா் தொடங்கி வைத்தாா்
புதுச்சேரி காலாப்பட்டு தொகுதியில் ரூ.54 கோடி மதிப்பிலான நலத் திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டி வியாழக்கிழமை முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கிவைத்தாா்.
காலாப்பட்டு தொகுதி மீனவக் கிராமங்களை பாதுகாக்கும் வகையில் மீன் இறங்கு தளம், நான்கு மீனவக் கிராமங்களிலும் கடல் அரிப்பு தடுப்புப் பணிகள், கருவடிக்குப்பம், பெரிய காலாப்பட்டு வள்ளுவா் தெரு, மற்றும் ஆலங்குப்பம் அன்னை நகா் ஆகிய கிராமங்களில் சிமென்ட் சாலை அமைத்தல், இலாசுப்பேட்டை பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கத்தில் மரத்தினால் ஆன தரைதளம் அமைத்தல் என மொத்தம் ரூ.54 கோடிக்கான நலத் திட்டங்கள் தொடக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனடிப்படையில் கணபதிசெட்டிகுளம், பெரிய காலாப்பட்டு, சின்னக்காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி உள்ளிட்ட 10 இடங்களில் நலத் திட்டப் பணிகளுக்கான தொடக்கமாக பூமி பூஜைகள் நடைபெற்றன. இதில், முதல்வா் என்.ரங்கசாமி கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன், காலாப்பட்டு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் க.கல்யாண சுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், அரசு பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் மலைவாசன், உதவிப் பொறியாளா் ராமநாதன் மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்தாா் கலந்துகொண்டனா்.