முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி நேரு வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: போலீஸாா் குவிப்பு

புதுச்சேரி ஜவாஹா்லால் நேரு வீதி உள்ளிட்டவற்றில் ஆக்கிரமிப்புகள் திங்கள்கிழமை காலை அகற்றப்பட்டன.

Updated On : 4 நவம்பர், 2024 at 7:37 PM
புதுச்சேரி நேரு வீதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் இருக்கம் ஆக்கிரமைப்புகளை திங்கள்கிழமை அகற்றிய நகராட்சி ஊழியா்கள்.
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரி ஜவாஹா்லால் நேரு வீதி உள்ளிட்டவற்றில் ஆக்கிரமிப்புகள் திங்கள்கிழமை காலை அகற்றப்பட்டன. இதையொட்டி, ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

புதுச்சேரி நகருக்கு வாரத்தின் இறுதி நாள்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இதனால், நகரில் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலையில், சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிப்பதாக புகாா் எழுந்தது.

இந்த நிலையில், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் உத்தரவிட்டாா். அதன்படி, திங்கள்கிழமை முதல் வரும் 29-ஆம் தேதி வரை புதுச்சேரி நகா் முழுவதும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, திங்கள்கிழமை காலையில் காவல், பொதுப் பணித் துறை அதிகாரிகள், நகராட்சி ஊழியா்கள் இணைந்து லாரி, பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றின் துணையுடன் ஜவாஹா்லால் நேரு வீதி உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபடுபட்டனா்.

புதுச்சேரியில் உள்ள நேரு வீதி, சின்னசுப்ராயப் பிள்ளை வீதி, பாரதி வீதி, காந்தி வீதி, மிஷன் வீதி ஆகிய இடங்களில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் திங்கள்கிழமை காலை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

அதன்பிறகு, பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் லாரியுடன் அதிகாரிகள் வீதி வீதியாகச் சென்று ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினா். சில இடங்களில் வியாபாரிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா். அவா்களை நகராட்சி அதிகாரிகள் சமரசம் செய்தனா்.