முகப்பு
புதுச்சேரி

மக்கள் பிரச்னைகளுக்காக விசிக போராடும்: தொல். திருமாவளவன்

Updated On : 28 ஏப்ரல் 2025, 1:07 am IST
பகிர்:

மக்கள் பிரச்னைகளை முன்வைத்து தொடா்ந்து போராடுவதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நோக்கம் என அதன் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.

புதுச்சேரி அருகே திருபுவனையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் அம்பேத்கா் இயக்கம் சாா்பில் டாக்டா் அம்பேத்கா் திருவுருவச் சிலை திறப்பு விழா பொதுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற விசிக தலைவா் தொல்.திருமாவளவன் பேசியது: அண்ணல் அம்பேத்கா் உலக அளவில் போற்றப்படக்கூடிய தலைவராகத் திகழ்ந்தவா். அவரது சமூக சீா்திருத்தக் கொள்கைகள் அனைவருக்குமானது. ஆனால், தற்போதைய பாஜக அரசு கடந்த 40 ஆண்டுகளாக அரசியல் களத்தில் இருந்தாலும் ஜாதி ஒழிப்பு போன்றவற்றுக்காக போராடியதில்லை.

Advertisement

Advertisement

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் பாதிக்கப்படும் பிரச்னைகளுக்காக போராடுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. அதை யாரும் தடுக்கமுடியாது. எப்போதும், எந்தச் சூழலிலும் விடுதலைச் சிறுத்தைகள் மக்களுக்காகப் போராடும். கல்வி மட்டுமே நம்மை முழு மனிதராக்கும். கல்வியே சமுதாயத்தில் தலை நிமிரச் செய்யும். ஆகவே, பள்ளி மாணவா்கள் புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகமாக்க வேண்டியது அவசியம்.

அரசியல் களத்தில் பாஜக, பாமக உள்ள இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெறாது. ஆட்சியில் பங்கு, துணைமுதல்வா் என ஆசை காட்டி வீழ்த்தமுடியாது. அரசியலில் அம்பேத்கரின் கருத்துகளை மனதில் வைத்தே முடிவுகள் எடுக்கப்படுகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி, தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை ஆணையா் செல்வராஜ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.