அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்
அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி என விசிக பதிலளித்துள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை மட்டும் வாங்கிக்கொண்டு, அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் உங்களின் 'சமூக நீதியை' நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இன்று தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது. அக்கட்சியின் வன்னி அரசு அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இந்த செயலை கண்டிக்கும் வகையில், திமுக எம்.பி. ஆ. ராசா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கருத்துகளைப் பதிவிட்டிருந்த நிலையில், அதற்கு பதிலாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எக்ஸ் பக்கத்தில் சில கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
விசிக ஒன்றும் மற்ற கட்சிகளின் தயவில் வளரவில்லை!
தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இரத்தமும் சதையுமாய் சிந்தி, ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்கு வங்கியைத் தக்கவைத்து, கூட்டணி கட்சிகளின் வெற்றிக்குத் தோள் கொடுத்தது சிறுத்தைகளின் உழைப்பு!
"கட்சித் தாவல்" பற்றிப் பேச மற்ற கட்சியினருக்கு என்ன தகுதி இருக்கிறது? காங்கிரஸை வீழ்த்த சங் பரிவாருடன் (BJP) கூட்டணி வைத்த வரலாறு யாருடையது?
வாஜ்பாய் அமைச்சரவையில் அங்கம் வகித்துவிட்டு, பிறகு அதே பாஜகவை எதிர்த்த 'சுயநல சாணக்கியத்தனம்' யாருடையது? இது போன்ற பல அரசியல் நாடகங்களை தமிழ்நாடு பார்த்திருக்கிறது...
கொள்கைக்காகக் கரம் கோர்த்தோம், நாங்களாகக் கூட்டணியை விட்டு வெளியேறுகிறோம் என்ற அறிவிப்பை இன்னும் வெளியிடக்கூட இல்லை... அதற்குள் ஏன் இந்த எரிச்சல்?
ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை மட்டும் வாங்கிக்கொண்டு, அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் உங்களின் 'சமூக நீதியை' நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்!
விசிக என்னும் பேரியக்கம் எழுச்சித் தமிழரின் உழைப்பால், கோடிக்கணக்கான சிறுத்தைகளின் இரத்தம் மற்றும் வியர்வையால் வளர்க்கப்பட்டது. கட்சி நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் எந்த நேரத்தில் எந்த அரசியல் உத்தியைக் கையாள வேண்டுமென்று எங்களின் மாண்புமிகு தலைவர் @thirumaofficial அவர்களுக்கு நன்றாகத் தெரியும்!
எங்களை விமர்சிப்பதற்கு முன், கூட்டணிக் கட்சிகளை வெறும் 'வாக்கு வங்கி' ஏணியாக மட்டும் பயன்படுத்திக்கொண்டு, அவர்களின் உழைப்பைச் சுரண்ட நினைத்த உங்களின் சுயநலப் புத்தியைப் போய் கேள்வி கேளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.