முகப்பு
புதுச்சேரி

குடியரசு தினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

குடியரசு தின விழாவையொட்டி, புதுச்சேரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, புதுச்சேரி-தமிழக போலீஸாா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 23 ஜனவரி, 2025 at 6:50 PM
பகிர்:

குடியரசு தின விழாவையொட்டி, புதுச்சேரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, புதுச்சேரி-தமிழக போலீஸாா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வருகிற 26-ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுவதையடுத்து, புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை திடலில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தேசியக் கொடியேற்றி, காவல் துறை மரியாதை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறாா்.

விழாவில் புதுவை முதல்வா், அமைச்சா், எம்எல்ஏக்கள் பங்கேற்பா்.

விழாவின் போது, பல்வேறு துறையினரின் அணிவகுப்புகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதற்கான ஒத்திகைகள் கடற்கரைச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகின்றன.

விழாவையொட்டி, புதுச்சேரி ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

புதுச்சேரி நகரிலுள்ள விடுதிகளில் தங்குவோா் குறித்த விவரங்களை அந்தந்தப் பகுதி காவல் நிலையத்துக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுவை சட்டப்பேரவை வளாகம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசுக் கட்டடங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.

ஐ.ஜி. தலைமையில் ஆலோசனை: புதுவை-தமிழக எல்லைப் பகுதிகளில் ஒருங்கிணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் விதமாக, புதுவை ஐ.ஜி. அஜித்குமாா் சிங்கால் தலைமையில் விழுப்புரம், கடலூா் மாவட்ட எஸ்.பி.க்கள், புதுவை காவல் துறை உயா் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.