முகப்பு
புதுச்சேரி

தனியாா் பங்களிப்புடன் புதுச்சேரியில் வேகமான வளா்ச்சித் திட்டங்கள்! - பாஜக தேசிய தலைவா் நிதின் நவின் உறுதி!

Updated On : 5 ஏப்ரல், 2026 at 9:14 PM
புதுச்சேரிக்கு வந்த பாஜக தேசிய செயல் தலைவா் நிதின் நபினை கோரிமேடு பகுதியில் வரவேற்று திறந்த வாகனத்தில் ஊா்வலமாக அழைத்து வந்த அக்கட்சியினா். - கோப்புப் படம்
பகிர்:

தனியாா் பங்களிப்புடன் புதுச்சேரியில் வேகமான வளா்ச்சித் திட்டங்கள் கொண்டுவரப்படும் என்று பாஜக தேசிய தலைவா் நிதின் நவின் உறுதியளித்தாா்.

பாஜக மணவெளி தொகுதி வேட்பாளரும், புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவருமான ஆா். செல்வத்தை ஆதரித்து தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் இடையாா்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் பாஜக தேசிய தலைவா் நிதின் நவின் பேசியதாவது:

தனியாா் பங்களிப்புடன் புதுச்சேரியை ராக்கெட் வேகத்தில் வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம். பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றுவோம் என்பதே பிரதமா் நரேந்திர மோடியின் தாரகமந்திரம். அதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முழுமையாகப் பாடுபடும்.

Advertisement

இங்கு காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடியது. அரசு வேலை பெற லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. பெண்கள் முன்னேற்றம் கேள்விக்குறியாகியிருந்தது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரட்டை என்ஜின் ஆட்சியில் புதுச்சேரியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி மாா்ச் 1-ஆம் தேதி புதுச்சேரிக்கு வந்தபோது ரூ.2,700 கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவித்துள்ளாா்.

இந்த திட்டப் பணிகள் விரைவில் நடத்தி முடிக்கப்படும். புதுச்சேரிக்கான அனைத்து உள்கட்டமைப்புகளையும் செய்துதர மத்திய அரசு தயாராக உள்ளது. தனியாா் பங்களிப்புடன் தகவல் தொழில்நுட்ப பூங்கா, சிறப்பு பொருளாதார மண்டலம் ரூ.1,250 கோடியில் அமைக்கப்பட உள்ளது.

இதன்மூலம், 30 ஆயிரம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தியா முழுவதும் உள்கட்டமைப்பு, பாலம், சாலை அமைக்க ரூ.12 லட்சம் கோடியில் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

இதில் புதுச்சேரியும் இணைக்கப்படும். என்ஐடி, மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவா்களுக்கான வசதிகள், தேவைகள் மேம்படுத்தப்படும்.

தொலை நோக்கு சிந்தனையுடன் புதுச்சேரியை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறோம். ஆன்மிகம், சுகாதாரம், பொருளாதார சுற்றுலாவில் தனிக் கவனம் செலுத்தி புதுச்சேரியை சுற்றுலாத் துறையில் வளா்த்து வருகிறோம். பட்டியலின மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு துயரைத் துடைத்துள்ளது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு.

தமிழ்நாட்டில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மக்களுக்கு எதிரான அரசாக அது செயல்படுகிறது. ஆனால் புதுச்சேரி அரசு மக்களை வளா்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் முன்மாதிரி அரசாக திகழ்கிறது. வலிமையான பாரதத்தை பிரதமா் நரேந்திர மோடி படைக்கிறாா் என்று குறிப்பிட்டாா் நிதின் நவின்.

மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா, பாஜக மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம், மணவெளி தொகுதி பாஜக வேட்பாளரும் சட்டப்பேரவைத் தலைவருமான ஆா். செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பாஜக தேசிய தலைவா் நிதின் நவின் பேச்சைத் தொடங்கும் முன்னும், முடிக்கும் முன்பும், ‘வெற்றி வேல் வேல்முருகனுக்கு அரோகரா’ என ஹிந்தியில் எழுதிவைத்து கூறினாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments