புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறதா என்.ஆர். காங்கிரஸ்?
புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் விலகுவதாகத் தகவல்...
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான பேச்சுவார்த்தையை முதல்வரும் என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி புறக்கணித்துள்ளதால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரியில் கடந்த 2021 தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் இடம்பெற்றது. தற்போது அங்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
வரும் தேர்தலிலும் பாஜகவுடன் என்.ஆர். காங்கிரஸ் இணைந்து போட்டியிட உள்ளதாகவே தகவல் வெளியானது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தின.
அதில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை ரங்கசாமி முன்வைத்ததாகவும் அதற்கான உறுதிமொழியை பாஜக தர வேண்டும் என்று கோரியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் 2021 தேர்தலைப்போலவே ஆளும் என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் 14 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா கூறியிருந்தார்.
மேலும் புதிய கட்சிகள், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேபோல அதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது பின்னர் பேசி முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.
இந்நிலையில் இன்று காலை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த என்.ஆர். காங்கிரஸுக்கு பாஜக அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், முதல்வர் ரங்கசாமி இந்த பேச்சுவார்த்தையைப் புறக்கணித்துள்ளார்.
என்டிஏ கூட்டணியில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் என்பவரால் புதிதாகத் தொடங்கப்பட்ட லட்சிய ஜனநாயகக் கட்சி இணையவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் அதற்கு ரங்கசாமி எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
மேலும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை பாஜக நிறைவேற்றாததாலும் ரங்கசாமி அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய ஆட்சியில் ரங்கசாமிக்கு தெரியாமலேயே 3 பாஜக நியமன எம்எல்ஏக்களை நியமித்தது, ஆளுநர் மூலமாக பல்வேறு அழுத்தங்கள் கொடுத்தது ஆகியவற்றாலும் ரங்கசாமி அதிருப்தி அடைந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதனால் பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுபற்றிய அதிகாரபூர்வ தகவல் எதுவும் இல்லை.
இதனிடையே புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் நேற்று(மார்ச் 16) தொடங்கிய நிலையில் நேற்று யாருமே வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரிக்கு வருகிற ஏப்ரல் 9 ஆம் தேதி பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.