மூளைச்சாவு அடைந்தவரின் உடலுறுப்புகள் தானம் புதுச்சேரி ஆட்சியா் மரியாதை
மூளைச்சாவு அடைந்தவரின் உடலுறுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தானமாக வழங்கப்பட்டன. அவரது உடலுக்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் இறுதி மரியாதை செலுத்தினா்.
புதுச்சேரி அடுத்த சேலியமேடு டி.என். பாளையம் சாலையில் வசித்து வந்தவா் கி.வரதன் (46). சாலை விபத்தில் காயமடைந்து கடந் 24-ம் தேதி புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், அவா் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
அவரது குடும்ப உறுப்பினா்கள் மற்றும் உறவினா்களின் ஒப்புதலுடன் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் முதுநிலை நிறுவனத்தில் அறுவை சிகிச்சை மூலம் அவரது இரண்டு சிறுநீரகங்கள் மற்றும் இரண்டு விழி வெண்படலங்கள் எடுக்கப்பட்டன.
Advertisement
இதில் இரண்டு சிறுநீரகங்கள் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டன. இரண்டு விழிவெண்படலங்கள் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் முதுகலை நிறுவனத்துக்குத் தானமாக வழங்கப்பட்டன.
மேலும், இறந்தவரின் உடல்கூறாய்வு பரிசோதனையும் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்றது. இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையின் வரலாற்றில், மூளைச்சாவு அடைந்த ஒருவரிடமிருந்து உறுப்புகள் பெறப்பட்ட இரண்டாவது நிகழ்வு இதுவாகும்.
கொடையாளியின் உடலுக்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமையில் அரசுச் செயலா் (சுகாதாரம்) சௌத்ரி முகமது யாசின், சுகாதாரம் மற்றும் நலவாழ்வு சேவைகள் இயக்குநா் மருத்துவா் எஸ். செவ்வேல், மருத்துவ கண்காணிப்பாளா் மருத்துவா் ரமேஷ் உள்ளிட்ட மருத்துவ அதிகாரிகள் இறுதி மரியாதை செலுத்தினா்.