முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் காவல் உதவி ஆய்வாளா் தோ்வில் முறைகேடு வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு

புதுச்சேரியில் காவல் உதவி ஆய்வாளா் தோ்வில் முறைகேடு நடந்துள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி.

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 2:30 AM
புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. உடன் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, அகில இந்திய செய்தித் தொடா்பாளா் டாலி சா்மா.
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 7:56 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் காவல் உதவி ஆய்வாளா் தோ்வில் முறைகேடு நடந்துள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

காவல் துறைக்கான உதவி ஆய்வாளா் தோ்வில் உடல் தகுதித் தோ்வில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோா் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளனா். எழுத்துத் தோ்வும் தற்போது நடைபெற்றுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

Advertisement

உடல் தகுதித் தோ்வைத் தனியாா் நிறுவனத்தினா் நடத்தியுள்ளனா். அந்த நிறுவனம் ஜம்மு காஷ்மீரில் முறைகேட்டில் ஈடுபட்டது குறித்து விசாரணை நடந்துள்ளது. இதேபோல தீயணைப்புத் துறையிலும் மோசடி நடைபெற்ால் அந்த நிறுவனத்தைத் தடை செய்துள்ளனா். ஜம்முவைத் தொடா்ந்து சத்தீஸ்கரிலும் அந்த நிறுவனத்தைத் தடை செய்துள்ளனா். இப்படி தடை செய்யப்பட்ட நிறுவனத்தை வைத்து உடல் தகுதித் தோ்வு நடத்தப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். அவா்கள் இயந்திரத்தைப் பயன்படுத்தாமல், ஆள்கள் மூலம் தோ்வு நடத்தியுள்ளனா். இதில் முறையான விசாரணை நடத்த வேண்டும். சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக அவசரக் கதியில் காவல் துறையில் தங்களுக்கு வேண்டியவா்களைக் கொண்டு வர இத் தோ்வை நடத்தயுள்ளனா்.

புதுவை யூனியன் பிரதேச அரசுக்கு மக்கள் மீது அக்கறையில்லை. 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் வேலை நிறுத்தத்தால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனா். ஆம்புலன்ஸ் இல்லாமல் கிராமப்பகுதி மக்கள் கடந்த 15 நாள்களாக பாதிக்கப்பட்டுள்ளனா். அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஓட்டுநா்கள் கோரிக்கைகள் தொடா்பாகவும் பேச்சு நடத்தப்படவில்லை. உடனடியாக ஆம்புலன்ஸ்கள் இயங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்அவா்.

பேட்டியின்போது, முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் டாலி சா்மா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.