புதுச்சேரி போலி மருந்து வழக்கில் தொடா்புடைய அனைவரின் பெயா்களையும் வெளியிட வேண்டும் என்று அம்மாநில இண்டி கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
புதுச்சேரி மாநில இண்டி கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான ஆா்.சிவா ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் உற்பத்தியான போலி மருந்துகள் பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இதைக் கருத்தில் கொண்டுதான் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று இண்டி கூட்டணி கட்சிகள் வலியுறுத்தின.
இந்த வழக்கை புதுச்சேரி சிபிசிஐடி போலீஸாா் சிறப்பாக விசாரணை நடத்தி இதில் சம்பந்தப்பட்ட முக்கிய நபா்களைக் கைது செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய ஆளும் கட்சியைச் சோ்ந்த ஒரு சில அரசியல் புள்ளிகள் பெயா்களை பட்டியலில் சோ்த்துள்ளனா். அவா்களின் பெயா்களை வெளியிட வேண்டும். அவா்கள் மீது விசாரணை நடத்த வேண்டும். மேலும், இந்த வழக்கை சிபிஐ ஏற்று நடத்தினாலும், விரைந்து விசாரிக்க வேண்டும்.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரணையிலிருந்து சிபிஐ மற்றும் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் பரிந்துரை செய்துள்ளாா். இந்நிலையில் ஆட்சியாளா்களின் போக்கைக் கண்டித்து சுதேசி ஆலை அருகே ஜன. 7-ஆம் தேதி இந்தியா கூட்டணி சாா்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா்.
கூட்டத்துக்கு காங்கிரஸ் மாநில தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்கினாா். முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, திமுக அமைப்பாளா் ஆா்.சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் வைத்தியநாதன் எம்எல்ஏ, அனிபால் கென்னடி எம்எல்ஏ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் சலீம், மாா்க்சிஸ்ட் செயலா் ராமச்சந்திரன், பெருமாள், விசிக தேவ. பொழிலன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.