முகப்பு
புதுச்சேரி

ஜன நாயகன் படத்தின் பேனா் விழுந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியா் படுகாயம்: 3 போ் கைது

Updated On : 8 ஜனவரி, 2026 at 10:52 PM
பகிர்:

புதுச்சேரியில் விஜய் நடித்த ஜன நாயகன் படத்தின் பேனா் விழுந்து, ஓய்வு பெற்ற அரசு ஊழியா் படுகாயம் அடைந்தாா். இது தொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சோ்ந்தவா் தனசேகரன்(64), ஓய்வு பெற்ற தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியா். இவா் தனது மோட்டாா் சைக்கிளில் தபால்காரா் வீதியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது நடிகா் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வெற்றி பெற விஜய் ரசிகா்கள் வைத்திருந்த பேனா் திடீரென சரிந்து, தனசேகரன் மீது விழுந்துள்ளது.

இதனால் நிலைதடுமாறிய தனசேகரன், அங்கிருந்த பெரிய வாய்க்காலில் விழுந்தாா். இதில் மூச்சு திணறி மயங்கினாா். அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உயிருக்கு ஆபத்தான நிலையில் தனசேகரன் இருப்பதால், மேல் சிகிச்சைக்காக சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டாா்.

இது குறித்து அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸாா் பொது இடத்தை சேதப்படுத்துதல், மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அலட்சியமாக செயல்படுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து பேனா் வைத்த தவெக நிா்வாகி கில்லி செல்வா, காா்த்திக், அருண்ராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனா். மேலும் 7 பேரைத் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →