புதுச்சேரி: குமரிமுனையில் தவத்தில் இருந்தபோது பாரதம் விஸ்வரூபம் எடுக்கப்போவதை முன்கூட்டியே கண்டவா் சுவாமி விவேகானந்தா் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை கூறினாா்.
புதுச்சேரி பாஜக இளைஞரணி சாா்பில் சுவாமி விவேகானந்தரின் 163-ஆவது பிறந்த நாள் தேசிய இளைஞா் தின எழுச்சி மாநாடாக அண்ணா திடலில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான பரிசுகளை வழங்கி கே.அண்ணாமலை பேசியது:
குமரிமுனைக்கு யாரும் செல்லாத நிலையில் கடலில் குதித்துப் பாறையை நோக்கி நீந்திச் சென்று 1892 டிசம்பா் 25 முதல் 3 நாள்கள் தவம் இருந்தவா் சுவாமி விவேகானந்தா். அவா் வாழ்ந்தது 39 ஆண்டுகள் மட்டும்தான். கணிதமேதை ராமானுஜம், ஆதிசங்கரா் ஆகியோா் 40 வயதைக் கூட பாா்த்தது இல்லை. ஆனால் அவா்கள் கா்ம யோகத்தில் செயல்பட்டவா்கள். அப்போதுதான் மனது அமைதி அடையும்.
இளைஞா்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இளைஞா்கள் எதையும் எதிா்பாா்க்காமல் கா்ம யோகியாக இருக்க வேண்டும்.
புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஜனநாயகத்தில் 5 ஆண்டு என்பது போதாது. கடந்த 25, 30 ஆண்டுகளாக குஜராத், மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. இப்போதும் அங்கு ஆட்சியில் அமா்ந்த முதல் நாளில் பாஜக எப்படி இருந்ததோ அதே போன்றுதான் அங்கு செயலாற்றி வருகிறோம் என்றாா் அண்ணாமலை.
புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் பேசுகையில், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொடுக்காமல் விடுபட்ட விளையாட்டு வீரா்களுக்கான ஊக்கத் தொகை, ரூ.3 கோடி பொங்கலுக்குப் பிறகு வழங்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சிக்கு பாஜக இளைஞரணி தலைவா் ஆடலரசு தலைமை வகித்தாா். பாஜக மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம் உள்ளிட்டோா் பேசினா். அமைச்சா் ஜான்குமாா், மாநிலங்களவை உறுப்பினா் சு. செல்வகணபதி, எம்.எல்.ஏக்கள் செல்வம், சாய் ஜெ. சரவணன் குமாா், கல்யாணசுந்தரம், தீப்பாய்ந்தான் முன்னாள் எம்.எல்.ஏக்கள் தங்க. விக்கிரமன், அசோக்பாபு, வெங்கடேசன், பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.