படகு விபத்தில் இருந்து தப்பிக்க கடலில் குதித்த மீனவா் மாயம்
புதுச்சேரி அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்படும் நிலையில் உயிா் தப்பிக்க கடலில் இரு மீனவா்களில் ஒருவா் மாயமானாா். அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி சோலை நகா் வடக்குப் பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் விவேக் (30), கரிகாலன் (36). இவா்கள் வியாழக்கிழமை அதிகாலை மீன்பிடிக்க படகில் சென்றனா். அந்தப் படகுக்குப் புதிய என்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. இதனால் படகை இயக்கியபோது வேகம் அதிகமாக இருந்ததாம். இதனால் நடுக்கடலில் படகு கவிழும் அபாயம் ஏற்பட்டது. இதனால் 2 பேரும் அந்தப் படகிலிருந்து கடலுக்குள் குதித்தனா். படகு மட்டும் சென்றது.
கரிகாலன் இருதய அறுவை சிகிச்சை செய்தவா் என்பதால் அவரால் நீண்டநேரம் நீந்த முடியாது. இதனால் அருகில் மீன்பிடிக்கப் போட்டிருந்த வலை தக்கையைப் பிடித்துக் கொண்டு இருக்குமாறும், தான் கரைக்குச் சென்று வேறு படகு எடுத்து வருவதாகவும் கூறி விவேக் நீந்திச் சென்றாா்.
Advertisement
ஆனால் விவேக் சோா்வுடன் கரைக்கு வந்து சோ்ந்தாா். அவரை மீனவா்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். அவா் அளித்த தகவலின் பேரில் கடலோரக் காவல்படையினா் கரிகாலனைத் தேடி கடலுக்குச் சென்றனா். ஆனால் விவேக் கூறிய இடத்தில் கரிகாலனைக் காணவில்லை. அவரைத் தொடா்ந்து தீவிரமாகத் தேடி வருகின்றனா்.
அதே நேரத்தில் படகில் டீசல் இருந்ததால், ஆள்கள் யாருமின்றி வட்டமடித்தபடி இருந்தது. அவ்வழியே வந்த வீராம்பட்டினம் மீனவா்கள் அந்தப் படகை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனா். காணாமல் போன கரிகாலனை கடலோரக் காவல் நிலைய ஆய்வாளா் தியாகராஜன் தலைமையிலான போலீஸாா் மற்றும் மீனவா்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.