அந்தமான் கடலில் கவிழ்ந்த ரோஹிங்கியா அகதிகள் படகு! 250 பேரின் நிலை என்ன?
அந்தமான் கடலில் 250 ரோஹிங்கியா அகதிகள் சென்ற படகு கவிழ்ந்தது குறித்து...
அந்தமான் கடல்பகுதியில், ரோஹிங்கியா அகதிகள் மற்றும் வங்கதேச நாட்டினர் உள்பட சுமார் 250-க்கும் அதிகமானோர் சென்ற படகு கவிழ்ந்து மூழ்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் டெக்னாஃப் நகரத்தில் இருந்து கடந்த ஏப். 4 அன்று சுமார் 280 ரோஹிங்கியா மற்றும் வங்கதேச அகதிகள் பயணித்த படகு ஒன்று மலேசியாவை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்தமான் கடல்பகுதியில் வீசிய பலத்த காற்று மற்றும் ராட்சஸ அலைகளில் சிக்கி அந்தப் படகு நடுக்கடலில் கவிழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதனைத் தொடர்ந்து, வங்கதேச கடலோரக் காவல்படையின் எம்.டி. மேக்னா பிரைட் எனும் கப்பல் மூலம் சுமார் 36 மணிநேரத்துக்குப் பிறகு ஏராளமான அகதிகள் மீட்கப்பட்டதாகவும், இந்தோனேசியா சென்ற மற்றொரு அகதிகள் படகு கடலில் தத்தளித்த ஒரு பெண் உள்பட 9 பேரை மீட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்தக் கப்பலில் பயணித்து மாயமான குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட சுமார் 250 பேரைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்த மீட்புப் பணிகள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.
முன்னதாக, மியான்மர் நாட்டின் சிறுபான்மையின ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், ஏராளமான ரோஹிங்கியா மக்கள் இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர்.
மேலும், கடந்த 2025 ஆம் ஆண்டு மியான்மர் கடல்பகுதியில் நடைபெற்ற 2 வெவ்வேறு படகு விபத்துகளில் சுமார் 427 ரோஹிங்கியா அகதிகள் பலியானதாக, ஐ.நா. அகதிகள் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.