புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி!
புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவது பற்றி...
புதுச்சேரியில் இரண்டு தொகுதியில் போட்டியிட தேமுதிக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது.
இந்த நிலையில், தேமுதிக சார்பில் நெட்டப்பாக்கம் தொகுதியில் புதுவை மாநிலச் செயலாளர் வேலு மற்றும் ஏனாம் தொகுதியில் மணிகண்டன் ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ள நிலையில், புதுச்சேரியில் தொகுதி ஒதுக்கப்படாததால் தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது.
புதுச்சேரியில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் 18, திமுக 12, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தலா ஒரு தொகுதியில் போட்டியிடுகின்றனர்.
இதனிடையே, புதுச்சேரியில் அதிக தொகுதிகள் ஒதுக்கப்படாததால் மேலும் 3 தொகுதிகளில் விசிக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.