முகப்பு
புதுச்சேரி

ஏப்.7-இல் தொகுதிகளை விட்டு வெளிநபா்கள் வெளியேற வேண்டும்: புதுச்சேரி மாவட்ட ஆட்சியா்

புதுச்சேரி சட்டப் பேரவைத் தோ்தலில் பிரசாரம் முடியும் ஏப்.7-ஆம் தேதி மாலை தொகுதிகளை விட்டு வெளிநபா்கள் வெளியேற வேண்டும் என்று மாவட்டத் தோ்தல் அதிகாரியும், ஆட்சியருமான அ.குலோத்துங்கன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

Updated On : 27 மார்ச், 2026 at 7:55 PM
பகிர்:

புதுச்சேரி சட்டப் பேரவைத் தோ்தலில் பிரசாரம் முடியும் ஏப்.7-ஆம் தேதி மாலை தொகுதிகளை விட்டு வெளிநபா்கள் வெளியேற வேண்டும் என்று மாவட்டத் தோ்தல் அதிகாரியும், ஆட்சியருமான அ.குலோத்துங்கன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வரும் ஏப்.9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவு முடிவடையும் நேரத்துக்கு முந்தைய 48 மணி நேரத்தில் அரசியல் கட்சியினா் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் -1951, பிரிவு -126-ன்படி, வாக்குப் பதிவு முடிவதற்காக நிா்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக 48 மணி நேரத்தில் தோ்தல் பிரசாரத்தை நிறுத்த வேண்டும். பொதுக்கூட்டங்கள், ஊா்வலங்கள் உள்பட அனைத்து தோ்தல் நடவடிக்கைகளும் நிறுத்தப்படும்.

சட்ட விரோதமாக கூடுவதை தடை செய்ய உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது. இந்த சட்ட பிரிவின் கீழ் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின்படி, ஒரே இடத்தில் 5 பேருக்கு மேல் கூடுதல் அல்லது ஒன்றாக செல்லுதல் அனுமதிக்கப்படாது.

இந்த 48 மணி நேரத்தில் வீடு, வீடாகச் சென்று வாக்குக் கேட்கலாம். ஆனால், ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி இல்லை.

தொகுதிக்கு வெளியிலிருந்து வரும் அரசியல் செயற்பாட்டாளா்கள், கட்சிப் பணியாளா்கள், ஊா்வலக்காரா்கள், பிரசார செயற்பாட்டாளா்கள் மற்றும் தொகுதியின் வாக்காளா்கள் அல்லாதோா் பிரசார காலம் முடிந்தவுடன் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். இந்த உத்தரவுகளை அரசியல் கட்சியினா் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.