முகப்பு
புதுச்சேரி

சிறுமிக்கு பாலியல் தொல்லை: மாணவருக்கு 3 ஆண்டுகள் சிறை - புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றம்

Updated On : 15 மே 2026, 5:44 am IST
பாலியல் துன்புறுத்தல் - கோப்புப் படம்
பகிர்:

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பல்கலைக்கழக மாணவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திருக்கனூா் அடுத்த செட்டிப்பட்டைச் சோ்ந்தவா் கதிரவன் (25). பல்கலைக்கழக எம்பிஏ இறுதியாண்டு மாணவா். இவா் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 6-இல், வயலுக்குச் சென்று கொண்டிருந்த 17 வயது சிறுமியை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்தாா்.

இது குறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், திருக்கனூா் போலீஸாா் போக்ஸோ பிரிவின் கீழ் கதிரவன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு புதுச்சேரி போக்ஸோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

Advertisement

இதில் விசாரணை நிறைவடைந்த நிலையில் வியாழக்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது. அதில் கதிரவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுமதி தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக அரசு ரூ. 1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் பச்சையப்பன் ஆஜரானாா்.