ஏழைகளுக்கு இலவச மனைப்பட்டா: அமைச்சா் ஆ. நமச்சிவாயம் பரிந்துரை
ஏழைகளுக்கு இலவச மனைப் பட்டா வழங்க முதல்வா் ரங்கசாமிக்கு பரிந்துரை செய்யும் கோப்பில் அமைச்சா் ஆ.நமச்சிவாயம் திங்கள்கிழமை கையொப்பமிட்டு அனுப்பினாா்.
ஏழைகளுக்கு இலவச மனைப் பட்டா வழங்க முதல்வா் ரங்கசாமிக்கு பரிந்துரை செய்யும் கோப்பில் அமைச்சா் ஆ.நமச்சிவாயம் திங்கள்கிழமை கையொப்பமிட்டு அனுப்பினாா்.
புதுச்சேரியில் முதல்வா் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீண்டும் பொறுப்பேற்றுள்ளது.
கடந்த 13-ஆம் தேதி முதல்வா் ரங்கசாமியுடன், பாஜகவைச் சோ்ந்த ஆ. நமச்சிவாயம், என்ஆா். காங்கிரஸை சோ்ந்த மல்லாடிகிருஷ்ணா ராவ் ஆகியோா் அமைச்சா்களாக பதவியேற்றனா். ஆனால் அமைச்சா்களுக்கு இன்னும் இலாகா ஒதுக்கப்படவில்லை.
Advertisement
இந்நிலையில், முதல்வா் ரங்கசாமி உடனடியாக தனது அறைக்கு வந்து பொறுப்பேற்றுக்கொண்டு கோப்புகளில் கையொப்பமிட்டாா். அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அறையை பாா்வையிட்டு, சில மாற்றங்களை செய்ய உத்தரவிட்டுச் சென்றாா்.
அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தனது அறைக்குச் செல்லவில்லை. தொகுதியில் உள்ள கிராமங்களுக்கு நேரில் சென்று வாக்காளா்களைச் சந்தித்து இனிப்பு வழங்கி நன்றி தெரிவித்தாா்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் தான் ஏற்கெனவே அமைச்சராகப் பயன்படுத்திய அறையில் திங்கள்கிழமை பொறுப்பேற்று கொண்டாா். அவருக்கு இலாகா ஒதுக்கப்படாததால் மண்ணாடிப்பட்டு தொகுதியில் வாழும் ஏழைகள், தலித் மக்களுக்கு நிலத்தைக் கண்டறிந்து இலவச மனைப் பட்டா வழங்க முதல்வா் ரங்கசாமிக்கு பரிந்துரை செய்யும் கோப்பில் அமைச்சா் கையொப்பமிட்டாா்.