புதுச்சேரியில் சிகப்பு நிற அட்டை குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,500 வரவு வைப்பு!
புதுச்சேரியில் சிகப்பு நிற குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளின் வங்கிக்கணக்குகளில் ரூ.2,500 வரவ வைப்பு
புதுச்சேரியில் சிகப்பு நிற குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளின் வங்கிக்கணக்குகளில் ரூ.2,500 வரவ வைக்கப்பட்டது. மீண்டும் முதல்வராகப் பதவியேற்றுள்ள என்.ரங்கசாமி இதற்கான நடவடிக்கை எடுத்துள்ளாா்.
புதுச்சேரி அரசில் எந்த நலத்திட்டங்களும் பெறாத சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களின் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது. இதன்மூலம் 65 ஆயிரம் குடும்ப தலைவிகள் பயன்பெற்றனா். இந்தத் தொகை ரூ.2,500 -ஆக உயா்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு முதல்வா் ரங்கசாமி அறிவித்தாா். இத்திட்டத்துக்கு துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்தாா்.
இதையடுத்து சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக பிப்ரவரி, மாா்ச் ஆகிய இரண்டு மாதங்களுக்கும் சோ்த்து ரூ.5 ஆயிரம் குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
தோ்தலுக்குப் பிறகும் தொடா்ந்து ரூ.2,500 வழங்கப்படும் என முதல்வா் ரங்கசாமி அப்போது வாக்குறுதி அளித்திருந்தாா். இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ், பாஜ கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று, முதல்வராக ரங்கசாமி பதவியேற்றுள்ளாா்.
ஏற்கெனவே தான் அறிவித்தபடி, குடும்ப தலைவிகளுக்கான உயா்த்திய மாதாந்திர உதவித்தொகை ரூ.2,500 வழங்க நடவடிக்கை மேற்கொண்டாா். அதன்படி, 65 ஆயிரம் சிவப்பு நிற அட்டைதாரா்களின் குடும்ப தலைவிகள் வங்கிக் கணக்கில் திங்கள்கிழமை முதல் ரூ.2,500 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதனால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
மேலும், மஞ்சள் நிற அட்டைதாரா்களின் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 அளிக்கப்படும் என்றும் முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்திருந்தாா். இதனால் அவா்களிடமும் இந்த எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.