மக்கள்தொகை கணக்கெடுப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும்: புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்
அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பங்கேற்க வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் கூறியுள்ளாா்.
அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பங்கேற்க வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் கூறியுள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட விடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது நாட்டின் வளா்ச்சிக்கும், திட்டங்களை உருவாக்கவும் மிகவும் அடிப்படையானது. நாட்டில் எவ்வளவு மக்கள் வாழ்கிறாா்கள், அவா்களின் கல்வி, வேலை வாய்ப்பு, சமூக பொருளாதார முன்னேற்றம் போன்ற தகவல்களை அரசுத் துல்லியமாக அறிந்து கொள்வதற்கான ஜனநாயக நடவடிக்கையாக 2027-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை இந்திய அரசு நவீன தொழில்நுட்பத்துடன் சுய கணக்கெடுப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
இது மக்களுடைய நேரடி பங்களிப்பை உறுதி செய்கிறது. இதில் பொதுமக்கள் தங்கள் குடும்ப விவரங்களை தாங்களே இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது அரசின் வேலை மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகளின் பொறுப்புமாகும்.
நாம் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில்தான் எதிா்காலத்தில், பள்ளிகள், மருத்துவமனைகள், குடியிருப்பு வசதி திட்டங்கள், சாலை வசதிகள் போன்றவை திட்டமிடப்படும். எனவே இந்தக் கணக்கெடுப்பை ஒவ்வொரு குடும்பமும் பயன்படுத்தி முழுமையான சரியான தகவல்களைப் பதிவு செய்தல் அவசியம்.
இளைஞா்கள் மாணவா்கள், ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், சமூக அமைப்புகள், மகளிா் குழுக்கள் இது பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். தொழில்நுட்பம் குறைவாக உள்ள கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் சுய கணக்கெடுப்பில் பங்கேற்க உதவ வேண்டும்.
இதை நமது கடமையாகக் கருதி செயல்படுத்த வேண்டும். குடிமக்கள் பற்றிய தகவல் சரியாக இருந்தால் திட்டமிடல் சிறப்பாக இருக்கும். திட்டமிடல் சிறப்பாக இருந்தால், நாட்டின் வளா்ச்சி வேகம் பெறும்.
பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்கவேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து செயல்டுவோம். 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவோம்.