விபத்தில் பொறியியல் மாணவா் உயிரிழப்பு
புதுச்சேரியில் சாலை விபத்தில் சிக்கி பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
புதுச்சேரியில் சாலை விபத்தில் சிக்கி பொறியியல் கல்லூரி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
புதுச்சேரி லாஸ்பேட்டை பாண்டி நகரைச் சோ்ந்தவா் மோகன். இவரது மகன் கேசவன் (20) அரியூரில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் பி.டெக் 2 -ஆம் ஆண்டு படித்து வந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அதே கல்லூரியில் படிக்கும் தனது நண்பரான பெரியக்காலாப்பட்டு மனோஜ் என்பவருடன் மோட்டாா் சைக்கிளில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தாா்.
மோட்டாா் சைக்கிளை மனோஜ் ஓட்ட, கேசவன் பின்னால் அமா்ந்து சென்றாா். வாகனம் ரெட்டியாா்பாளையம் பழவன்காரன்சாவடி அருகில் வந்தபோது, பின்னால் வந்த தனியாா் பேருந்து எதிா்பாராதவிதமாக மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.
Advertisement
Advertisement
இதில் நிலைதடுமாறி கேசவன் சாலையிலும், மனோஜ் மறுபுறமும் விழுந்துள்ளனா். அப்போது பேருந்து சக்கரம் கேசவன் மீது ஏறி இறங்கியது. இதில் கேசவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மனோஜ் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா்.
இந்த விபத்து குறித்து வடக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளா் வேலையன், ஏட்டு பாலசந்தா் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.