பழமையானக் கட்டடம் பாதுகாக்கப்படுமா
திருக்கோவிலூரில் உள்ள பழமையான கட்டடத்தைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருக்கோவிலூரில் உள்ள பழமையான கட்டடத்தைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் ஊரக வளர்ச்சித் துறை இருந்த போது, திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஓடுகளால் ஆன வளர்ச்சிப் பிரிவு அலுவலகம் அமைக்கப்பட்டது.
1962 ஜனவரி 27-ஆம் தேதி அப்போதைய மாவட்ட ஆட்சியர் சோமசுந்தரம் இந்த அலுவலகத்தைத் திறந்து வைத்தார். 1968-ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சித்துறை தனியாக பிரிக்கப்பட்டது. இருந்தும் இந்த அலுவலகம் இங்கு தொடர்ந்து செயல்பட்டு வந்தது. பின், இந்த அலுவலகம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, பழைய கட்டடம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பாடின்றி காணப்படுகிறது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கட்டடம், இப்போதும் மிக வலுவான நிலையில் காணப்படுகிறது.
இக்கட்டடத்தில் இடம்பெற்றுள்ள விலை மதிப்புள்ள தேக்கு மரங்களால் உருவாக்கப்பட்ட ஜன்னல்கள், கதவுகள் மற்றும் கூரை வாரைகள் உறுதியாகவும், இரும்புக் கம்பிகள் மிக வலுவாகவும் உள்ளது.
பயன்பாடின்றி உள்ள இந்தக் கட்டடத்தை தற்போது லேசான பராமரிப்புப் பணி மேற்கொண்டு செயல்பாட்டுக்குக் கொண்டு வரலாம். அதன் மூலம் இப்பகுதியில் வாடகைக் கட்டடத்தில் இயங்கும் குடிநீர் வடிகால் வாரியம் போன்ற பல அலுவலகங்களுக்கு இது ஏதுவாக அமையும்.
இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு.