இணைய தகவல் களஞ்சியமாக கருதப்படும் விக்கிபீடியாவில் தமிழ் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகாரிக்க வேண்டும் என விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
விழுப்புரம் மற்றும் புதுவை கட்டற்ற மென்பொருள் பயனர் குழுமம் விழுப்புரம், கிழக்கு பாண்டி சாலை சாந்தி நிலையத்தில் "விக்கிபீடியா அறிமுகம்-பங்களிப்பு'என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்தியது.
கருத்தரங்கில் கனடா தமிழ் இலக்கிய தோட்டம் சுந்தர ராமசாமி நினைவு கணிமை விருது பெற உள்ளவரும், தகவல் தொழில்நுட்ப ஊழியருமான த.சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர், பேசியதாவது: விக்கிபீடியா, அறிவு பகிர்வு தளமாகும். இங்கு, அவரவர் பகுதியில் உள்ள விவரங்கள், தகவல்களை எழுதி விக்கிபீடியாவில் விவரங்களை பிறருக்கு அளிக்கலாம்.
இதனை உலகின் எந்த மூலையில் உள்ளவரும் பயன்படுத்த முடியும். நம் முன்னோர்கள் நமக்கு புத்தக வடிவில் கொடுத்துச் சென்றனர். அடுத்த தலைமுறைக்கு, டிஜிட்டல் வடிவத்தில் கொடுக்க வேண்டியுள்ளது. உலகின் 280 மொழிகளில் இதனை எழுத வாய்ப்புள்ளது. தமிழ் மொழியில் கடந்த மாதம் வரை ஒரு லட்சம் கட்டுரைகள் விக்கிபீடியாவில் எழுதப்பட்டுள்ளன. இது ஆங்கிலத்துடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கை குறைவு. அதனால், தமிழ் மொழியில், தங்களது பகுதியில் நடைபெறும் திருவிழாக்கள், சிறப்புகள் என அனைத்தையும் பதிவீடு செய்யலாம்.
விக்கிபீடியாவால் பதிவிடும் தகவல்கள் 100 சதவீதம் உண்மையானது என்று கூறுமுடியாது. ஆனால், இதில் பதிவான தகவல்களை திருத்தும் வாய்ப்பு உள்ளதால், அதன்பிறகு கொடுக்கப்பட்ட விவரங்களை மெருகேற்ற முடியும் என்றார்.
கருத்தரங்கில் மருதம் ரவிகார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக கார்க்கி வரவேற்றார். சதீஷ் நன்றி கூறினார்.