பயிர்க் காப்பீட்டுத் திட்டம்: விவசாயிகளுக்கு அழைப்பு
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக வல்லம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.குமாரிஆனந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளிலிருந்து பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பங்களை கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும் உதவும். 2017-18-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல்பயிரை பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி நடப்பாண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் வல்லம் வட்டாரத்தில் 80 வருவாய் கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறாத விவசாயிகள், விழுப்புரம் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் நியூ இந்தியா அஷுரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்துகொள்ளலாம்.
சம்பா பருவத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் இந்தத் திட்டத்தில் பதிவுசெய்ய கடைசி நாள் நவ.30-ஆம் தேதியாகும். எனவே, விவசாயிகள் இறுதி நேர நெரிசலை தவிர்க்கவும், விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டுத் தொகையை செலுத்தி தங்களது நெல்பயிரை முன்கூட்டியே பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பயிர் காப்பீட்டுத் தொகையில் விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும், அதாவது ஏக்கருக்கு ரூ.353 காப்பீட்டுக் கட்டணமாக செலுத்தினால் போதுமானது.
விவசாயிகள் இந்தத் திட்டத்தின்கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்தியபின், அதற்கான ரசீதையும் பொதுச் சேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக்கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளார்.