மரக்காணத்தில் தொடர் மழை: உப்பளங்கள் நீரில் மூழ்கின
மரக்காணத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக உப்பளங்கள் நீரில் மூழ்கின. இதனால், நிகழ் ஆண்டு உப்பு உற்பத்தி முன் கூட்டியே நிறுத்தப்பட்டது.
மரக்காணத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக உப்பளங்கள் நீரில் மூழ்கின. இதனால், நிகழ் ஆண்டு உப்பு உற்பத்தி முன் கூட்டியே நிறுத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட கடலோரப் பகுதியான மரக்காணத்தில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளன. இங்கு ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை (வடகிழக்கு பருவ மழைக் காலம்) உப்பு உற்பத்தி செய்யப்படும்.
இத் தொழிலில் 3 ஆயிரம் தொழிலாளர்கள் வரை ஈடுபட்டுள்ளனர். ஆண்டு தோறும் 20 லட்சம் டன் அளவில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமல்லாது புதுவை உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
நிகழ் ஆண்டும் உப்பு உற்பத்தி பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. இதனிடையே, கடந்த மாதத்தில் தென்மேற்கு பருவ மழையும், தற்போது வட கிழக்கு பருவ மழையும் தொடங்கி பரவலாக பெய்து வருவதால், உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மரக்காணம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (அக்.29) முதல் பருவமழை பெய்து வருகிறது.
கடல் அலைகளின் சீற்றமும் அதிகரித்துள்ளது. இதனால், கடற்கரையையொட்டி செல்லும் பக்கிங்காம் கால்வாய் வழியாக கடல் நீரும், மழை நீரும் உப்பளப் பாத்திகளில் புகுந்து குளம் போல் தேங்கியுள்ளது. மேலும், மழை தொடர்வதால் மரக்காணம் பகுதியில் உப்பு உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்தாண்டு பருவமழையின்மை காரணமாக டிசம்பர் வரை உப்பு உற்பத்தி நீடித்தது. இதனால், அதிகளவாக 30 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தியானது
ஆனால், நிகழ் ஆண்டு முன்னதாகவே வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், உப்பு உற்பத்தியும் முன் கூட்டியே நிறுத்தும் நிலை ஏற்பட்டுவிட்டது.
இந்த நிலை சீரடைந்து, மீண்டும் பிப்ரவரியில் தான் உற்பத்தி தொடங்கும்.
அதுவரை உப்பளத் தொழிலாளர்களுக்கு மீனவர்களுக்கு வழங்குவதைப் போல இடைக்கால நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும் என்றும், உற்பத்தி செய்யப்படும் உப்பை சேமித்து வைக்கவும், பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்பவும் அரசு சார்பில் வியாபாரிகளுக்கு கிடங்கு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.