கோமுகி அணையில் மீன் பிடித்த மாணவர் சேற்றில் சிக்கி சாவு
கோமுகி அணையில் மீன் பிடிக்கச் சென்ற பிளஸ் 2 மாணவர் சேற்றில் சிக்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
கோமுகி அணையில் மீன் பிடிக்கச் சென்ற பிளஸ் 2 மாணவர் சேற்றில் சிக்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சியை அடுத்த எடுத்தவாய்நத்தம் புதுக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் அன்பரசன் (17). அண்மையில் பிளஸ் 2 தேர்வை எழுதி முடித்துள்ள இவர், கச்சிராயப்பாளையம் கோமுகி அணையில் தந்தை சக்திவேலுடன் மீன் பிடிப்பதற்காகச் சென்றிருந்தார். சிறிது நேரத்தில் சக்திவேல் வீட்டுக்குச் சென்று விட்டார். அன்பரசன் அதே ஊரைச் சேர்ந்த நண்பர் விக்னேஷுடன் ஆற்றுப்படுகை பகுதிக்கு நீந்திச் சென்றார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது அன்பரசனை காணவில்லை.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து சேற்றுப் பகுதியில் சிக்கியதால் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்த அன்பரசனின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கச்சிராயப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.