திடீர் குழப்பத்தால் பார் கவுன்சில் தேர்தலில் வாக்குப்பதிவு பாதிப்பு
செஞ்சி பார் கவுன்சில் தேர்தலில் வாக்குப்பதிவு நடந்துகொண்டிருந்தபோது சில வழக்குரைஞர்கள் திடீரென பிரச்னையில் ஈடுபட்டதால் வாக்குப்பதிவு மாலை வரை நீடித்தது.
செஞ்சி பார் கவுன்சில் தேர்தலில் வாக்குப்பதிவு நடந்துகொண்டிருந்தபோது சில வழக்குரைஞர்கள் திடீரென பிரச்னையில் ஈடுபட்டதால் வாக்குப்பதிவு மாலை வரை நீடித்தது.
தமிழ்நாடு , புதுச்சேரி பார்கவுன்சிலுக்கு மொத்தம் உள்ள 25 உறுப்பினர் பதவிக்கு 192 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 171 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்கு மையத்தில் புதன்கிழமை காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கடேசன் தேர்தல் அதிகாரியாகவும், துணை அதிகாரிகளாக வழக்குரைஞர்கள் ஆத்மலிங்கம், கண்ணதாசன் ஆகியோர் தேர்தலை நடத்திக் கொண்டிருந்தனர்.
மொத்த வாக்காளர்கள் 129 பேர். பிற்பகல் 1 மணி அளவில் 82 பேர் வாக்குப்பதிவு செய்திருந்த நிலையில், சில வழக்குரைஞர்கள் ஏன் வழக்குரைஞர் பெயருடன் கூடிய வாக்குச் சீட்டை பெட்டியில் செலுத்தி வருகிறீர்கள். இதனால் யாருக்கு வாக்கு அளித்தோம் என்ற விவரம் வெளியில் தெரிந்துவிடும். எனவே, வாக்குச்சீட்டில் உள்ள வாக்காளர் பெயரை கிழித்துவிட்டுத்தான் பெட்டியில் போடவேண்டும் என வாதிட்டனர். இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குவாதம் நடைபெற்று வாக்குப்பதிவு தடைபட்டது. பின்னர் வாக்குச்சீட்டில் உள்ள பெயரை கிழித்து போடுமாறு கூறப்பட்டது.
இதையடுத்து, மீண்டும் 3 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியவுடன் ஏற்கெனவே பெயருடன் வாக்குப் பதிவு செய்தவர்கள் தகராறில் ஈடுபட்டனர். இதனால் மீண்டும் வாக்குப்பதிவு தடைபட்டது.
பின்னர் சமாதான முயற்சிக்குப் பிறகு மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி தொடர்ந்து நடைபெற்றது.