மரக்காணம் அருகே பேருந்து மோதியதில் இருவர் சாவு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே இரு சக்கர வாகனம் மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே இரு சக்கர வாகனம் மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரன்வீர்சிங் மகன் ஹிமான்ஸ் (26), குணசேரன் மகன் ஜெய்விக்னேஷ் (23).
தனியார் நிறுவன ஊழியர்களான இவர்கள் புதன்கிழமை அதிகாலை சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
மரக்காணம் அருகே அணிச்சங்குப்பம் பகுதியில் அதிகாலை 3 மணியளவில் சென்ற போது, எதிரே வந்த தனியார் சொகுசுப் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் ஹிமான்ஸ், ஜெய்விக்னேஷ் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து வந்த மரக்காணம் போலீஸார் சம்பவம் குறித்து விசாரித்தனர்.
பின்னர் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், போலீஸார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, பேருந்து ஓட்டுநரான நாகை மாவட்டம், மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த சீனுவாசனை (44) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.