காவிரி: டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் விழுப்புரத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் விழுப்புரத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சித் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார்.
மாநில பொருளாளர் ஜெய்கணேஷ், மாநில துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் வீரப்பன், மாவட்டச் செயலாளர் சிவக்குமார், நிர்வாகிகள் லதா ஏழுமலை, சேகர் செந்தில் ஆகியோர் சிறப்புரையாற்றினர். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டிக்கிறோம்.
மேலும், மத்திய அரசுக்கு உரிய முறையில் அழுத்தம் கொடுத்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க செய்யாமல், மத்திய அரசுடன் இணக்கம் காட்டி வரும் தமிழக அரசையும் கண்டிக்கிறோம். ஆகவே, இனிமேலும் ஏதாவது காரணம் கூறி தள்ளிப்போடாமல் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் சக்திவேல், அழகன், தேவேந்திரன், வெங்கடேசன், முருகன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மாவட்ட பொருளாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.