நூலகக் கட்டடம் திறப்பு விழா
திருக்கோவிலூர் அருகே மேலந்தல் கிராமத்தில் நூலகக் கட்டடம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருக்கோவிலூர் அருகே மேலந்தல் கிராமத்தில் நூலகக் கட்டடம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருக்கோவிலூர் வட்டம், முகையூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட மேலந்தல் கிராமத்தில் கடந்த 1995-ஆம் ஆண்டு நூலகம் தொடங்கப்பட்டது.
கடந்த 23 ஆண்டுகளாக வாடகை கட்டடம் மற்றும் வாடகை இல்லா நன்கொடை கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. போதுமான இட வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால், நூலகத்தை முழுமையாக பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.
சமீபத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்து, பயன்பாடின்றி இருக்கும் பள்ளிக் கட்டடத்தை நூலக பயன்பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனடிப்படையில், பழுதடைந்த பள்ளிக் கட்டடத்தை ரூ.60 ஆயிரம் செலவில் கிராம பொதுமக்கள் புனரமைத்தனர். இதையடுத்து, புனரமைக்கப்பட்ட கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நூலகம் திறக்கப்பட்டது.
திறப்பு விழாவுக்கு ஓய்வுபெற்ற வேளாண் அலுவலர் பெ.பழனிவேல் தலைமை வகித்தார். எண்ணெய் நிலைய உரிமையாளர் பெ.பாலசுப்பிரமணியம், அரசு ஒப்பந்ததாரர் ஆர்.பாரதிதாசன், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க நிர்வாகி பொன்.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நல்நூலகர் மு.அன்பழகன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாவட்ட நூலக அலுவலர் இரா.சுப்பிரமணியன் நூலகத்தை திறந்து வைத்துப் பேசினார்.
நூலகக் கொடையாளர் தா.சம்பத், வாசகர் வட்டத் தலைவர்கள் சிங்கார.உதியன், சி.சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.