விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கியில் வருகிற 15-ஆம் தேதி பொது மக்களுக்கான ரத்த தான முகாம், கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் 65-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா வருகிற 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனையொட்டி, விழுப்புரம் அரசு மருத்துவமனை அருகே உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்தில் வருகிற 15-ஆம் தேதி ரத்த தான முகாம், இலவச கண் பரிசோதனை முகாம் ஆகியவை நடைபெறுகின்றன.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் அன்று காலை 9 மணிக்கு தொடங்கி ரத்த தான முகாம் நடைபெறுகிறது. இதேபோல, விழுப்புரம் ஆர்.கே.அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாமும் நடைபெற உள்ளது. கூட்டுறவு சங்கத்தினரும், பொது மக்களும் இந்த முகாம்களில் கலந்துகொண்டு, ரத்த தானம் வழங்கியும், கண் பரிசோதனை செய்தும் பயன்பெற வேண்டும் என்று கூட்டுறவுத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.