விழுப்புரம் அருகே வேனில் பதுக்கி வைத்து கடத்திச் செல்லப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான மதுப்புட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மது விலக்கு அமல் பிரிவு போலீஸார், உதவி ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை விழுப்புரம்-செஞ்சி சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விக்கிரவாண்டி-ஒரத்தூர் சாலை வழியாக வந்த வேனை சந்தேகத்தின் பேரில் மறித்தனர்.
அப்போது, வேனில் வந்தவர்கள் அதை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். இதையடுத்து, வேனுக்குள் ஆய்வு செய்தபோது, இருக்கைப் பகுதிக்கு அடியில், பிரத்யேக இடத்தை ஏற்படுத்தி, அதனுள் புதுச்சேரி மதுப் புட்டிகளை அடுக்கி வைத்து, அதன் மீது அட்டைகள் போட்டு வெளியே தெரியாத வகையில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும், மொத்தம் 46 அட்டைப் பெட்டிகளில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான 2,208 மதுப்புட்டிகளை திருவண்ணாமலை நோக்கி கடத்திச் செல்ல முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மதுப்புட்டிகளை வேனுடன் போலீஸார் பறிமுதல் செய்து விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவில் ஒப்படைத்தனர்.
இது குறித்து, மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய நபர்களைத் தேடி வருகின்றனர்.