விழுப்புரத்தில் தாலுகா காவல் நிலையம் சார்பில், போலீஸார் பங்கேற்ற தலைக்கவச விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
பேரணியைத் தொடக்கிவைத்த காவல் ஆய்வாளர் ராஜன், காவலர்கள் தங்களின் பாதுகாப்பும், குடும்பப் பாதுகாப்பும் கருதி கட்டாயம் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனங்களை இயக்க வேண்டும்.
இரு சக்கர வாகன இயக்கத்தின்போது ஏற்படும் விபத்துகள், உயிரிழப்புகள் குறித்து பொதுமக்களுக்கு அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களையும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வலியுறுத்த வேண்டும் என்றார்.
இதையடுத்து, ஆய்வாளர் ராஜன், உதவி ஆய்வாளர்கள் பிரகாஷ், சதீஷ் ஆகியோர் தலைமையிலான போலீஸார், இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்தபடி, தாலுகா காவல் நிலையத்தில் தொடங்கி கிழக்கு பாண்டி சாலை, நேருஜி சாலை, திருச்சி சாலை வழியாக புதிய பேருந்து நிலையம் எல்லீஸ் சத்திரம் சாலை வரை சென்றனர்.
பின்னர், அங்கிருந்து மீண்டும் திருச்சி சாலை, சென்னை சாலை, மந்தக்கரை, திருவிக வீதி வழியாக சென்று மீண்டும் தாலுகா காவல் நிலையத்தை அடைந்தனர்.
பேரணியின்போது, இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று ஒலிபெருக்கியில் போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர்.