தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், விழுப்புரம் வீட்டுவசதி பிரிவு ஒதுக்கீடுதாரர்களுக்கு மேலும் ஓராண்டு காலம் வட்டித் தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு அரசு அளித்த வட்டித் தள்ளுபடி சலுகை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டுமனை உள்ளிட்ட பல்வேறு தவணைத் திட்டங்களில் ஒதுக்கீடுதாரர்கள் தள்ளுபடி நீங்கலாக, முழுத் தொகையையும் செலுத்தி, பத்திரம் பெற்று பயனடைந்து வருகின்றனர்.
ஏற்கெனவே வழங்கப்பட்ட இந்தச் சலுகை கடந்த 26.02.2019 தேதியுடன் முடிவடைந்ததால், இந்தச் சலுகை தற்போது 31.03.2020 வரை மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, வட்டிச் சுமையால் இதுவரை விற்பனை பத்திரம் பெறாத ஒதுக்கீடுதாரர்கள், நேரடியாக சம்பந்தப்பட்ட கோட்டம், பிரிவு அலுவலகங்களை அணுகி, வட்டித் தள்ளுபடி நீங்கலாக, நிலுவைத் தொகையை செலுத்தி விற்பனை பத்திரம் பெற்று பயனடையலாம் என்று விழுப்புரம் வீட்டு
வசதி வாரிய அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான சந்தேகங்களுக்கு 04146 - 249606 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.