விழுப்புரம், திருக்கோவிலூர், திருவெண்ணெய்நல்லூர் பகுதி கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கல்லூரி முதல்வர் ஏ.வி.அருணாகுமாரி வரவேற்றார். கல்லூரி துணைப் பதிவாளர் சௌந்திரராஜன் பேசினார். கல்லூரிச் செயலர் எஸ்.செந்தில்குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சமத்துவ பொங்கல் விழா குறித்து சிறப்புரையாற்றினார்.
இதையடுத்து, கல்லூரி வளாகத்தில் ஆசிரியர்கள், மாணவிகள் பொங்கல் வைத்து வழிபட்டனர். ஒவ்வொரு துறை மாணவிகள் சார்பில், தனித் தனியாக பொங்கல் வைத்தனர். பின்னர், மாணவிகளுக்கான கோலப்போட்டிகள், கிராமிய நடனப்போட்டிகள் நடைபெற்றன. பரிசுகளும் வழங்கப்பட்டன.
திருவெண்ணெய்நல்லூர் அரசு கலைக் கல்லூரி மாணவிகள் சார்பில், ஒரே நேரத்தில் 2,000 மாணவிகள் வரை பங்கேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழுப்புரத்தில் புதிய அலை மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாவட்டத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள், மாற்றுத் திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் கலை, அறிவியல் கல்லூரியில் சமத்துப் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரித் தலைவர் ஆர்.செல்வராஜ் தலைமை வகித்தார். செயலர் இ.சுப்பிரமணியன், பொருளாளர் வீ.ஏழுமலை, துணைத் தலைவர் எஸ்.முஸ்தாக்அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் டி.எஸ்.வீரமணி வரவேற்றார்.
விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கிராமப்புற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தாளாளர் ஏ.பழனிராஜ், நிர்வாக அலுவலர் ஆர்.குமார், அறக்கட்டளை உறுப்பினர்கள் எஸ்.இம்தியாஸ்அகமது, சதாம்உசேன் ஆகியோர் கிராமப்புற நடனம் ஆடி திறமைகளை வெளிப்படுத்திய மாணவ, மாணவிகளைப் பாராட்டிப் பேசினர்.
மேலும், பொங்கல் படைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை துணை முதல்வர் ஆர்.மீனாட்சி மற்றும் பேராசிரியர்கள், உடல்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.