விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் விழுப்புரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி நடத்தப்பட்ட இந்த ஊர்வலத்தில், விழுப்புரம் சந்தான பஜனைக் கோயில் தெருவில் உள்ள மகாத்மா காந்தி உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளியிலிருந்து ஊர்வலத்தை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலர்(பொ) நீதிபதி ஜெயமங்கலம் தொடக்கி வைத்தார்.
பள்ளி வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர். குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது குற்றம், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் போன்ற விழிப்புணர்வு
பதாகைகளை ஏந்தியபடி, மாணவர்கள் முழக்கமிட்டனர்.
இந்த ஊர்வலத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் ரவீந்திரன், மூத்த வழக்குரைஞர் நடராஜன், ஆசிரியர்கள் அருண், பிரகாஷ், சுதாகர், இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அந்தப் பள்ளியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் கட்டாயக் கல்வி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.