விழுப்புரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சனிக்கிழமை (ஜூன் 15) முதல் வீடு, வீடாக பிரசாரம் செய்ய உள்ளனர்.
இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பிரகாஷ், சே.அறிவழகன் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கை: ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு விழுப்புரத்தில் 139 சதுர கி.மீ, புதுவையில் 2 சதுர கி.மீ, ஆழமற்ற கடல் பகுதியில் 1,654 சதுர கி.மீ. என மொத்தம் 1,794 சதுர கி.மீ. பரப்பளவுக்குள் 116 எரிவாயு கிணறுகளை அமைக்க உள்ளனர்.
இந்தத் திட்டத்தில் மரக்காணம் துவங்கி கோட்டக்குப்பம் வரை எரிவாயு கிணறுகள் அமைக்கும் நிலை உள்ளது. பூமிக்கு அடியில் பாறைகளின் இடுக்குகளில் ஹைட்ரஜனும், கார்பனும் வாயுக்களாக தேங்கி உள்ளன.
பூமிக்கு அடியில் 1,000 மீட்டரிலிருந்து 5,000 மீட்டர் ஆழம் வரை இவை படிந்திருக்கின்றன. இவற்றை தோண்டி எடுக்க 1,000 மீட்டரிலிருந்து 3,000 மீட்டர் ஆழம் வரை ஆழ்துளை கிணறு தோண்ட உள்ளனர்.
இதனால், நிலத்தடி நீரே கிடைக்காத நிலை ஏற்பட்டு, இந்தத் திட்டம் செயல்படுத்தும் இடங்களில் விவசாயமே அழிவு நிலைக்கு தள்ளப்படும். ஹைட்ரோ கார்பன் கிணறுகளில் இருந்து பலவிதமான நச்சு வாயுக்கள் வெளியேறும்.
இவை சுற்றுப்புறச் சூழலை பாதித்து பேரழிவை ஏற்படுத்தும். மேலும், ஆழ்துளை கிணறுகளில் கடல் நீர் உள்புகும் சூழல் உள்ளது.
விவசாயம் இல்லாத பாலைவன பகுதிகளில் தான் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். எனவே, இந்தத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வலியுறுத்தி, மரக்காணம் - கோட்டக்குப்பம் இடையே உள்ள கிராமங்களில் சனிக்கிழமை முதல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி பிரசாரம் செய்ய உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.