மக்களவைத் தேர்தலையொட்டி, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் எச்சரித்தார்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெளியிட்ட
செய்திக் குறிப்பு:
மக்களவைத் தேர்தல் விதிமுறைகளின்படி, தேசியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்களுக்கு எதிராகவும், ஜாதி, மத ரீதியாகவும், எவரையும் அவதூறாக பேசுவதும், அதுதொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவு செய்வதும், அவற்றை பிறருக்கு பரப்புவதற்கு வழி வகை செய்வதும் சட்டப்படி குற்றமாகும்.
ஆகையால், பொதுமக்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளையும், எதிர்ப்புகளையும் ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்த வேண்டுமே தவிர, ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும், வன்முறையைத் தூண்டும் விதமாகவும், தேசிய, மாநில கட்சித் தலைவர்களை தரக்குறைவாக பேசி விடியோ பதிவிடுவதோ, மனதைப் புண்படுத்தும் வாசகங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்வதோ கூடாது.
பொதுமக்கள், மாணவர்கள் சமூக வலைதளங்களை கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.