கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே வியாபாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் உணவக உரிமையாளரை திட்டி தாக்கி மிரட்டல் விடுத்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி-கச்சிராயப்பாளையம் சாலையில் அரசு மருத்துவமனை அருகே உணவகம் நடத்தி வருபவர் பத்மநாபன் மகன் ஏழுமலை (40).
இவரது கடை அருகே உணவகம் நடத்தி வருபவர் கண்ணன் மகன் பாலசுப்பிரமணியன்.
இரு உணவக உரிமையாளர்களுக்கும் இடையே வியாபாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு ஏழுமலை தனது கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த பாலசுப்பிரமணியன் மகன் சதீஷ்குமார் (22), தனது உறவினரான பாலு என்பவருடன் சேர்ந்து, எங்கள் வியாபாரத்தை ஏன் தடுக்கிறாய் என்று ஏழுமலையைக் கேட்டு தகராறு செய்தாராம்.
தகராறு முற்றிய நிலையில் சதீஷ்குமார் தான் வைத்திருந்த கரண்டியால் ஏழுமலையைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் ஏழுமலை காயமடைந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து சதீஷ்குமாரை சனிக்கிழமை கைது செய்து வழக்கு தொடுத்தனர்.