விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே தேர்தலை புறக்கணிப்பதாக கிராமத்தில் ஒட்டிய சுவரொட்டிகளால் திங்கள் கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகிற அக்.21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தொகுதிக்கு உள்பட்ட அதனூரில் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக, திங்கள் கிழமை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இது குறித்து, அப்பகுதியினரிடம் கேட்டபோது, அதனூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு, கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான அனுமதி கிடைத்துள்ளது. இதற்காக, நிலத்தை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுக்கவில்லை. இதனால், தேர்தலை புறக்கணிக்கப்பதாகவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த கெடார் போலீஸார், கிராமத்துக்கு சென்று விசாரித்தபோது, கோரிக்கை உண்மைதான். ஆனால், தேர்தல் புறக்கணிப்பு செய்யவில்லை. இளைஞர்கள் சிலர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர்களுக்கு போலீஸார் அறிவுரை வழங்கிச் சென்றனர்.